இந்திய அணியில் உள்ள மிகப்பெரிய குறை - எச்சரிக்கை விடுக்கும் முன்னாள் வீரர்

Petchi Avudaiappan
in கிரிக்கெட்Report this article
டி20 உலக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிக்கு எதிரான தொடர்களை கைப்பற்றி இந்திய அணி சாதனைப் படைத்து வருகிறது. இதனால் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பையை இந்திய அணி எளிதாக வெல்லலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
காரணம் இந்திய அணியில் பிரச்சனையாக பார்க்கப்பட்ட மிடில் ஆர்டர் பேட்டிங்கை தற்போது ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர் போன்றவர்கள் தீர்த்து வைத்துள்ளனர். ஆனால் தற்போதும் இந்திய அணியில் பிரச்சனை உள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி இந்திய அணியின் பேட்டிங் மிகச்சிறப்பாக உள்ள நிலையில் பவுலிங்கில் அவர்களிடம் முழுமையான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை. . டி20 கிரிக்கெட்டில் மீடியம் பேஸர்களால் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பதால் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா, உம்ரான் மாலிக் ஆகியோரை போன்று இன்னும் சில வீரர்களை தயார்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கை விட, தற்போது பவுலிங்கில் கவனம் செலுத்த வேண்டும். முழுமையான வேகப்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து, அதிக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என சல்மான் பட் கூறியுள்ளார்.