இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடக்குமா? முன்னாள் பாக் வீரர் ஆசை
கிரிக்கெட் உலகில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் என்பது ரசிகர்கள் மத்தியில் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இருநாடுகளுக்கும் இடையே சுமூகமான உறவு இல்லாதபோதும் கிரிக்கெட் இருநாட்டு ரசிகர்களையும் ஒன்றிணைத்தது.
2013ம் ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. இருநாடுகளும் ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நேரடியாக இருதரப்பு தொடரிலோ முத்தரப்பு தொடரிலே ஆடுவதில்லை.
இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர்கள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக இருந்து வருகிறது. பல முன்னாள் வீரர்களுமே இதற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக்கும் அதே கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய இன்சமாம் உல் ஹக்,”ஆஷஸ் போட்டிகளை விட இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகளை அதிகமான பேர் விரும்பி பார்த்தனர். இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளின் ஒவ்வொரு நிகழ்வையும் ரசித்து ரசித்து பார்ப்பார்கள்.
எனவே கிரிக்கெட்டின் நலனுக்காகவும், கிரிக்கெட் வீரர்களின் நலனுக்காகவும், ஆசிய கோப்பை தொடர் மட்டுமல்லாது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு தொடர்களும் நடத்தப்பட வேண்டும்” என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.