“நான் திரும்ப வந்துட்டேனு சொல்லு” – ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது 2-வது வழக்கும், ரூ.5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டன.
மேலும், தி.மு.க., பிரமுகரை தாக்கிய வழக்கில் அவருக்கு ஜாமீ்ன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டதால், அவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது .
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீனில் விடுவிப்பு.. புழல் சிறை வளாகத்தில் அதிமுகவினர் வரவேற்பு..#Jayakumar #AIADMK #Puzhal pic.twitter.com/T1zuzdj9xW
— Noble Reegan J (@ReeganJNR) March 12, 2022
மேலும் திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள கண்டோமெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், சென்னை புழல் சிறையில் இருந்து இன்று காலை விடுதலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொய் வழக்கு போட்டு என்னை சிறையில் தள்ளியது திமுக அரசு. தேர்தலின் போது கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவினரை தடுத்ததால் கைது செய்யப்பட்டேன் என்று தெரிவித்தார்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை வரவேற்க சென்னை புழல் சிறை முன்பாக மேள தாளங்களுடன் அதிமுகவினர் குவிந்திருந்தனர்.