மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் வெளியேற தடை - இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இலங்கையை விட்டு மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் வெளியேற தடை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதேசமயம் உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் அஜித் நிவ்ராத் கப்ரால் கடந்த வாரம் ராஜினாமா செய்தார். இக்கட்டான சூழலில் அவர் பதவி விலகியது மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையிலான இவரது முதல் பதவிக்காலத்தில் அஜித் நிவ்ராத் கப்ரால் நிர்வாகத்தில் செய்த தவறுகள் தொடர்பாக கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஜித் நிவ்ராத் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து வருகிற 18 ஆம் தேதி கோர்ட்டில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.