ஆஸ்திரேலியாவில் பஸ் ஓட்டும் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
முன்னாள் இலங்கை அணி வீரரான சுராஜ் ரன்தீவ் ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வரும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை சேர்ந்த சுராஜ் ரன்தீவ் 2009 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடி உள்ளார்.
ஆப்-ஸ்பின்னரான இவர் 2011 உலக கோப்பை இறுதி போட்டியிலும் இந்தியாவுக்கு எதிராக விளையாடி உள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2011 - 2012 ஆகிய 2 ஆண்டுகள் சுராஜ் ரன்தீவ் விளையாடி உள்ளார். இலங்கை அணிக்காக இவர் 12 டெஸ்ட், 31 ஒருநாள் மற்றும் 7 டி 20 போட்டிகள் விளையாடி உள்ளார்.அதன் மூலம் டெஸ்டில் 43 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 36 விக்கெட்டுகளையும், டி 20 போட்டிகளில் 7 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் வாழ்வாதாரத்திற்கு வருமானம் ஈட்டும் நோக்கில் சுராஜ் ரன்தீவ் தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவரைப்போலவே ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெடிங்டன் வாயெங்கா மற்றும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சிந்தக நமஸ்தே ஆகியோர் ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.