இந்தியாவில் ஆண்களை விட பெண்களே எண்ணிக்கையில் அதிகம் - வெளியான பரபரப்பு தகவல்
இந்தியாவில் முதல்முறையாக ஆண்கள் எண்ணிக்கையை விட பெண்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக தேசிய குடும்ப சுகாதார மையம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 2019-21 ஆண்டுகளுக்கான தேசிய குடும்ப சுகாதார சர்வே-5 நடத்தியது. 2 கட்டங்களாக நடத்திய ஆய்வுகளின் விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வுகளின் படி , 88.6 சதவீத குழந்தைகள் மருத்துவமனையில் பிறந்துள்ளன. ஆனால் முந்தைய ஆய்வின் படி 78.9 சதவீதமாக உள்ளது. இது இந்தியாவில் மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறப்பதில் இந்தியா முன்னேறி செல்வதற்கு சான்றாக உள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் முதல்முறையாக ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன் படி, 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் என்கிற அளவுக்கு பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் இந்தியா, வளர்ந்த நாடுகளுடன் சேருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
ஆனால் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள மாநிலங்களாக குஜராத், மராட்டியம், அருணாசலபிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
அதே சமயம், குழந்தைகள் பிறப்பை பொறுத்தவரையில், 2015-16-ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 929 பெண்குழந்தைகள் என இருந்தது. இது 2019-20-ல் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 929 பெண் குழந்தைகள் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.
அதாவது, ஐந்தில் நான்கு தாய்மார்கள் 78 சதவீத தாய்மார்கள் பிரசவத்துக்கு பிந்தைய பராமரிப்பை பிரசவித்த 2 நாட்கள் வரையில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் மூலம் பெற்றுள்ளனர்.
முந்தைய சர்வேயில் இது 62.4 சதவீதமாக இருந்துள்ளது. இது பிரசவத்தின்போதும், அதற்கு பின்னரும் குழந்தைகள் இறப்பை தடுக்கும். மொத்த கருத்தரிப்பு விகிதம், ஒரு பெண்ணுக்கு 2 குழந்தைகள் என்கிற அளவை எட்டி உள்ளது.
முந்தைய சர்வேயில் இது 2.2 ஆக இருந்து இருக்கிறது. இது பெண்கள் கருத்தரிப்பு காலத்தில் குறைவான எண்ணிக்கையில் குழந்தை பெறுகின்றனர், குடும்பக்கட்டுப்பாடு, சற்றே தாமதமாக திருமணம் செய்தல் போன்ற அறிவினை பெண்கள் கொண்டுள்ளனர் என்பதை காட்டுகிறது.
குழந்தைகள் பிறப்பு பதிவை பொறுத்தமட்டில் 5 வயது வரையில் பதிவு செய்வது 89.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. முந்தைய சர்வேயில் இது 79.7 சதவீதமாக உள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.