கால்பந்தாட்ட பயிற்சியின்போது மயங்கி விழுந்த வீரர் மரணம் - சோகத்தில் மூழ்கிய நண்பர்கள்
தமிழ்நாடு ரயில்வே கால்பந்தாட்ட வீரர், பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, திடீரென்று மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்தவர் அமிர்தராஜா (45). இவர் ஐ.சி.எப்.பில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு கால்பந்து விளையாட்டு வீரர். ரயில்வே கால்பந்தாட்ட அணியில் இருக்கிறார்.
இந்நிலையில், நேற்று நொளம்பூர் பகுதியில் உள்ள மைதானத்தில் வீரர்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சி சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். அப்போது, அவருடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சகவீரர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், அவர் வரும் வழியில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர் திருச்சி ஒய்எம்சிஏ கல்லூரியில் படிப்பை முடித்துள்ளார். தமிழ்நாடு ரயில்வே கால்பந்து அணியில் அமிர்த ராஜா சிறப்பாக விளையாடி அவர் தலைமையில் பல பதக்கங்களையும் கோப்பைகளையும் வென்றுள்ளனர்.
ஜெர்மனி நாட்டில் நடைபெற்ற உலக ரயில்வே ஊழியர்களுக்கான கால்பந்து போட்டியில் இந்தியன் ரயில்வே அணியில் விளையாடி இருக்கிறார். இவரின் இறந்தச் செய்தியைச் கேட்டு, ரயில்வே ஊழியர்கள் மற்றும் கால்பந்து விளையாட்டு வீரர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.