அரசு மருத்துவமனை கேன்டீனில் உணவை எலி தின்ற விவகாரம் - புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேன்டீனில் உணவுகளை எலி தின்ற விவகாரத்தில், உணவு பாதுகாப்பு துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
உணவை எலி தின்ற விவகாரம்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கேண்டீனில் உள்ள உணவுகளை எலி சாப்பிடுவது போன்ற வீடியோ ஒன்று நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மருத்துவமனை முதல்வர் பாலாஜி கேண்டீனை மூடுவதற்கு உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு பொது மருத்துவமனைகளில் இயங்கி வரும் கேண்டீன்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது. மேலும், புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உணவு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், கேண்டீன்களை தொடர்ந்து முறையாக சுத்தம் செய்ய வேண்டும். கிருமி நாசினிகளை தெளிக்க வேண்டும். பூச்சிகள், விலங்குகள் உள்ளிட்டவை எளிதில் உணவகங்களுக்குள் வராத அளவிற்கு, முறையாக பராமரிக்க வேண்டும்.
புதிய வழிகாட்டு எரிமுறைகள்
அருகாமையில் இருக்கக்கூடிய சாக்கடைகள், கால்வாய்கள் உள்ளிட்டவற்றை முழுமையாக மூட வேண்டும். செல்லப்பிராணிகளோ, விலங்குகளோ, பறவைகளோ கேண்டீன்களுக்குள் அனுமதிக்கக்கூடாது.
மேலும், உணவுப் பொருட்களை கையாளுபவர்கள் எப்போதும் கைகளை சோப்பு மற்றும் சுத்தமான நீரைக் கொண்டு கழுவி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். உணவுப் பொருட்கள் நல்ல தரத்துடன் இருக்கிறதா, காலாவதி ஆகியுள்ளதா என்பதை அடிக்கடி சோதனை செய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவமனை கேண்டீன்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்து உணவு பாதுகாப்புத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.