பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்துவேன் என மிரட்டிய 5 ஆம் வகுப்பு மாணவன் கைது
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்துவேன் என மிரட்டிய 5 ஆம் வகுப்பு மாணவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் உவால்டே நகரில் உள்ள ராப் தொடக்கப்பள்ளியில் சல்வடார் ரொமஸ் என்ற 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளிக்குழந்தைகள், 2 ஆசிரியைகள் என மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடாரை போலீசார் சுட்டு வீழ்த்திய நிலையில் இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும், துப்பாக்கி வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை கடினமாக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
இதனிடையே இந்த சூழ்நிலையில் பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்துவேன் என்று மாணவன் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள புளோரிடா மாகாணம் கேப் கரொல் நகரில் உள்ள பெட்ரிட் ஆரம்ப பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன் டேனியல் மார்கஸ் தனது பள்ளியிள் புகுந்து மிகப்பெரிய அளவில் துப்பாக்கிச்சூடு நடத்துவேன் என்று மெசேஜ் மூலம் மிரட்டல் விடுத்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து மார்கசை கைது செய்த போலீசார் சிறுவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.