திடீர் வெள்ளத்தில் சிக்கிய 150 பேர்! உதவ தயாராக இருக்கிறோம்- எடப்பாடி அறிவிப்பு
உத்தரகண்ட் மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத்தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 150க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை உடைந்ததன் காரணமாக சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா மற்றும் தவுலிகங்கா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கில் சுமார் பத்து நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
இந்த துயரச் செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு மக்களின் சார்பிலும், தமிழ்நாடு அரசின் சார்பிலும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உத்தரகண்ட் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.