தொடங்கிய மீன்பிடி தடைகாலம்.., இன்று முதல் விசைப்படகுகள் நிறுத்தம்
தமிழகம் முழுவதும் கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் அமல்படுத்தப்படும் 61 நாள் மீன்பிடி தடைகாலம் இன்று முதல் தொடங்கியுள்ளது.
இந்த தடைகாலம் இன்று முதல் ஜூன் 14ஆம் திகதி வரை மொத்தம் 2 மாதங்கள் நீடிக்கும்.
இந்த காலம் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு முக்கியமானதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அரசு தடை விதித்துள்ளது.
ராமேசுவரம் துறைமுகத்தில் மட்டும் சுமார் 800 விசைப்படகுகள் நங்கூரமிட்டு வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.

பாம்பன், மண்டபம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் சேர்த்து 2,000க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்லாமல் உள்ளன.
இதனால் மாவட்டம் முழுவதும் 50,000க்கும் அதிகமான மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
தடைகாலம் தொடங்கியதால், மீனவர்கள் படகுகளில் இருந்த வலை, ஐஸ் பாக்ஸ் போன்ற பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
ஆனால் நாட்டுப்படகு மற்றும் பைபர் படகுகளுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் சந்தையில் மீன்களின் வரத்து குறையும், எனவே சில நாட்களில் மீன் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.