மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம்
மீனவர்கள் 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
அதன் காரணமாக தமிழகத்திலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன.
அதிலும் சில மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.