மீனவர்களின் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க வேண்டியது கடமை : மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
. கடந்த 1ம் தேதியன்று, கோடியக்கரையில் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதன்படி சர்வதேச சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாமல், நமது மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வன்முறையை பிரயோகிப்பது கண்டனத்துக்குரியது என தெரிவித்துள்ள முதலமைச்சர் .
இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூடு சம்பவம், கடலோர பகுதியில் வசிக்கும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் நம் நாட்டு மீனவர்களின் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்க வேண்டியதும், இலங்கை கடற்படை சர்வதேச சட்டங்களை கடைபிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டியது நமது கடைமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியதைச் சுட்டிக்காட்டி, இலங்கைக் கடற்படை சர்வதேச சட்டங்களுக்குட்பட்டு செயல்படுவதை உறுதிசெய்யவும், இப்பிரச்சினைக்கு அரசியல்ரீதியான தீர்வுகாணவும் வலியுறுத்தி மாண்புமிகு @DrSJaishankar அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். pic.twitter.com/LY8O60tLQu
— M.K.Stalin (@mkstalin) August 4, 2021
இந்திய மீனவர்கள் மீது எவ்விதமான வன்முறை நிகழ்த்தாமலும், அவர்களது வலைகளையும், படகுகளையும் சேதப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் இந்த பிரச்சினைக்கு நீடித்த அரசியல் தீர்வை காண வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.