தமிழகத்தின் இந்தாண்டு தச்சங்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு இனிதே நிறைவு
தமிழ்நாட்டின் முதலாவதாக, புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி 485 காளைகள் திறந்து விடப்பட்டு நிறைவு பெற்றது.
இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் பலவித இடையூறுகளுக்கு பிறகு இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 500 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியின் முடிவில் மொத்தம் 485 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
இதில் 17 காளைகளை பிடித்த திருநல்லூர் யோகேஸ்வரன் என்பவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு முதல் பரிசாக பைக் வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் இரண்டாவது பரிசு பெற்றார்.
பரிசுகளை அள்ளிச்சென்ற வீரர்கள்
தஞ்சை மருதகுடியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு, பைக் பரிசு அளிக்கப்பட்டது. தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு போட்டியின் முடிவில் 3 போலீசார் உட்பட மொத்தம் 70 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 12 பேர் பலத்த காயத்துடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெற்றி பெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மோட்டார் சைக்கிள், அண்டா, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் முன்னிலையில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. பாதுகாப்புப் பணிகளை கந்தர்வக்கோட்டை போலீஸார் செய்திருந்தனர்.