தமிழகத்தில் முதன்முறையாக ISO தரச்சான்றிதழ் பெற்ற அரசு பள்ளி
திருப்பரங்குன்றம் நிலையூர் அரசு உயர்நிலைப்பள்ளி தமிழகத்திலேயே முதன் முறையாக ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மதுரையின் திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூரில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைந்துள்ளது, இங்கு மிகக்குறைந்த மாணவர்களே கல்வி கற்று வந்தனர். இப்பள்ளிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விநாயகமூர்த்தி என்பவர் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார்.
மாணவர்களின் கல்வித்திறனை உயர்த்தவும், பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் விநாயகமூர்த்தி திட்டமிட்டார். இதன்படி ஆங்கில வழி கல்வி, இன்டர்காம் உட்பட மாணவர்களின் நலனுக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதன் பலனாக, தற்போது இப்பள்ளிக்கு ISO 9001 - 2015 தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.
மேலும் 6ம் வகுப்பு படித்து வந்த தன்னுடைய மகனை, இதே பள்ளியில் சேர்த்து மற்றவர்களுக்கு முன்உதாரணமாய் மாற்றியுள்ளார் விநாயகமூர்த்தி. அத்துடன் பள்ளிக்கு தேவையான ஆழ்துளை கிணறு, விளையாட்டு மைதானம் அமைப்பது, பெஞ்ச், மேஜை போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் மற்றும் தொகுதி எம்எல்ஏ மூலம் பெற்று பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித்தந்துள்ளது.
இங்கு மாணவர்களுக்காக தகவல் பலகைகள் மற்றும் பள்ளியில் அனைத்தும் போர்டுகளும் பெயிண்டிங் வசதி செய்து பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இந்திய ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர் மற்றும் கல்வி அமைச்சர் கல்வித்துறை செயலாளர் போன்றவை இடம்பெற்றுள்ளன.
மேலும் மாணவர்களுக்கு அவசர காலத்தில் தொடர்பு கொள்ளும் வகையில் 108, மற்றும் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் மற்றும் முக்கிய மாவட்டத்தில் உள்ள முக்கிய அதிகாரிகளின் போன் நம்பர்கள் தகவல் பலகையில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.