தெலுங்கானாவில் முதன்முறையாக நடந்த தன்பாலின திருமணம் - வாழ்த்திய தென்னிந்திய திரை பிரபலம்
உலகம் முழுவதும் பல நாடுகளில் தற்போது தன்பாலின திருமணங்கள் நடைபெற்று வருகிறது. பல நாடுகளில் அது சட்டப்பூர்வமாக்கப்பட்டும் விட்டது.
இந்தியாவிலும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பலரும் தங்களை அடையாளப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் முதன்முறையாக தன்பாலின திருமணம் நடைபெற்றுள்ளது.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 31 வயதான சுப்ரியோ தற்போது ஹைதபராத்தில் பணியாற்றி வருகிறார்.
சுப்ரியோவிற்கும், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 34 வயதான அபய்க்கும் இடையே எட்டு வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
பள்ளி பருவத்தில் இருந்து தன்பாலின ஈர்ப்பாளர்களாக தங்களை உணர்ந்த இருவரும், பின்னர் நாளடைவில் ஒருவரை ஒருவர் விரும்பத் தொடங்கினர்.
ஐ.டி. துறையில் பணியாற்றும் அபயும், சுப்ரியோவும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர்.
இவர்களது அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், சிலர் விமர்சித்தனர்.
தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையான சமந்தா இவர்களது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இவர்கள் இருவரது திருமணமும் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது.
இவர்களது திருமணத்திற்கு தொடக்கத்தில் இருவீட்டாரது பெற்றோர்களும் சம்மதிக்கவில்லை.
இப்போது, அவர்களது பெற்றோர்களும் அவர்களை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற முதல் தன்பாலின திருமணத்திற்கு பல தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.