இன்றைய போட்டியே முன்னணி நட்சத்திரங்கள் யாரும் பங்கு பெறாத முதல் ஐபிஎல் இறுதிப்போட்டி - ரசிகர்கள் சோகம்!
தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான போட்டிகள் கடந்த மார்ச் 26-ந்தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது.
வழக்கம் போல் 8 அணிகள் என்றில்லாமல் இந்த வருடம் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் என பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆஃப் சுற்றுக்கான ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
இந்த சுற்றுகளின் முடிவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப் போட்டி இன்று இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 8 மணியளவில் நடைபெறவுள்ளது.
அறிமுக தொடரிலேயே இறுதிப்போட்டி வரை வந்துள்ள குஜராத் அணி கோப்பையையும் வெல்ல வேண்டும் எனத் தீவிரமாக உள்ளது. மற்றொருபுறம் 2008-ம் ஆண்டுக்கு பிறகு 2-வது கோப்பையை வெல்ல ராஜஸ்தான் அணி முனைப்புடன் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாகவே இருக்கிறது.
இந்நிலையில், இந்த இறுதிப்போட்டி முன்னணி வீரர்களான தோனி ,ரோகித் ,விராட் கோலி ,கவுதம் கம்பீர் போன்ற எவரும் இடம்பெறாமல் நடைபெறவிருக்கும் முதல் ஐபிஎல் இறுதிப்போட்டி ஆகும்.
இதில் தோனி தலைமையிலான சென்னை அணி 4 முறையும் ,ரோகித் சர்மா தலைமையிலான மும்பை 5 முறையும், கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி 2 முறையும் கோப்பையை வென்றுள்ளன.
விராட் கோலி 2009, 2011, 2016 ஆகிய 3 ஐபிஎல் தொடர்களில் இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஐபிஎல் தொடர் தொடங்கியது முதல் இந்த நட்சத்திர வீரர்களில் இருந்து எவரேனும் ஒருவராவது இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளனர். ஆனால் இந்த வருடம் இவர்கள் யாரும் விளையாடமால் நடைபெற உள்ள முதல் ஐபிஎல் இறுதிப்போட்டி இதுவாகும்.