கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு..!
விழுப்புரம் மாவட்டம் அருகே கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் வேதனை
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாரயம் அருந்தியதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வந்த திரு.சுரேஷ், திரு.சங்கர், மற்றும் திரு.தரணிவேல் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடைந்தேன்.
கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க இந்த அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மரக்காணம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.அருள் வடிவழகன், உதவி ஆய்வாளர் திரு.தீபன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் திருமதி மரியா சோபி மஞ்சுளா மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சிவகுருநாதன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிதியுதவி
இச்சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய இதர குற்றவாளிகளைத் தேடும் பணியும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறப்பு சிக்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். என்று தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/VltkGlBACq
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 14, 2023