இது தான் ஒரு நல்லாட்சிக்கு அடையாளம் - நிதியமைச்சர் பி.தியாகராஜன்
தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கார்டு உள்ள குடும்பங்களுக்கு நான்காயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் முதற்கட்டமாக இன்று 2000 ரூபாய் வழங்கும் நிகழ்வு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் 2000 ரூபாய் நிதி வழங்கும் நிகழ்வு மதுரை வடக்குமாசி வீதி உள்ள ரேஷன் கடையில் நடைபெற்றது.
கொரோனா நிவாரண நிதி வழங்கிய நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பின்னர் செய்தியாளரிடம் கூறியதாவது, “தமிழக வரலாற்றில் பல சிறப்புமிக்க முதல்வர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். அந்த வகையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்னதை போல ’சொன்னதை செய்வோம்’ என்ற அடிப்படையில் அதுவும் விரைவாக செய்வோம் என்ற அடிப்படையில் பணியாற்றி வருகிறார்.
பதவியேற்று ஒரு வாரத்திற்குள் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். அந்த வகையில் இன்று 2000 ரூபாய் கொரோனா நிவாரன நிதி வழங்கப்பட்டு வருகிறது.
பணத்தை ரேசன் கடை மூலம் கொடுப்பதற்கு பதிலாக வேறு வகையில் கொடுத்திருக்கலாம் என்று சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதில் பல குளறுபடிகள் உள்ளது என்பதாலும் பொதுமக்களுக்கு விரைந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக பணமாக கையில் கொடுக்கப்பட்டுள்ளது.
நான் எதிர்கட்சி உறுப்பினராக இருந்தபொழுது தொடங்கப்பட்ட இந்த கடையில் திட்டத்தை முதல் முதலாக தொடங்கி வைக்கிறேன்’ தேர்தலுக்கு முன் அறிவிக்கப்பட்டு வழங்கப்படும் பணத்திற்கும், தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு அறிவிக்கப்பட்டு மக்கள் நலனுக்கு வழங்கக்கூடிய பணத்திற்கும் உள்ள வேறுபாடு மக்களுக்கு நன்றாக தெரியும்.
இது மக்களின் பணம் மக்களின் அனுதாபம், பேரிடர் உள்ளிட்ட எல்லா வகையிலும் வழங்குவது என்பது தெளிவான கருத்து நியாயமான செயல் அந்த வகையில் முதலமைச்சர் முன்னுதரமாக இருக்கிறார்.
கடையில் எந்த விதமான கட்சி அடையாளமோ யாரும் இல்லாமல் தமிழக அரசின் சிம்பிள் மட்டும் வைத்து வழங்கப்பட்டு வருகிறது. இது தான் ஒரு நல்லாட்சிக்கு அடையாளம் என நான் கருதுகிறேன்” என்றார்