பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதலை நடத்திய பெண் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்திய ஆசிரியை குறித்த பின்னணி தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் செயல்படும் பல்கலைக்கழகத்தில் சீனர்கள் பலர் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இதனிடையே நேற்று முன்தினம் சீனர்கள் உள்பட பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலரை ஏற்றி வந்த வேன் பல்கலைக்கழத்துக்குள் நுழைந்தபோது தற்கொலைப்படை பெண் பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த குண்டுகளை வெடிக்க செய்தார்.
இந்த தாக்குதலில் சீன பேராசிரியர்கள் 3 பேர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்த நிலையில் தாக்குதலை நடத்திய பெண் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்கிற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 30 வயதான ஷரி பலோச் என்கிற பரம்ஷா என்ற பெண்தான் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிய வந்துள்ளது. மேலும் இவர் விலங்கியல் துறையில் முதுகலை பட்டமும், கல்வியிலில் எம்.பில் பட்டமும் பெற்ற நிலையில் பள்ளிக்கூடம் ஒன்றில் அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார்.
பரம்ஷாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. கணவர் பல் மருத்துவராக உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த இவர் தாமாக முன்வந்து இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.