பெண் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் : நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்
பெண் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறிய நிலையில் அவருக்கு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருநெல்வேலி சுத்தமல்லி காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் மார்க்ரெட் தெரசா என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்தபோது ஆறுமுகம் என்ற நபர், உதவி ஆய்வாளரைக் கத்தியால் வெட்டியதையடுத்து, அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரைத் தாக்கிய ஆறுமுகம் என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெண் காவல் உதவி ஆய்வாளர் தாக்கப்பட்ட செய்தியை அறிந்த முதல்வர் அவர்கள், இச்சம்பவத்தில் காயமுற்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க்ரெட் தெரசாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
அதோடு மட்டுமல்லாமல், மார்க்ரெட் தெரசா அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று மதுரை சித்திரை திருவிழா பாதுகாப்பு பணியின்போது மாரடைப்பால் இறந்த உதவி ஆய்வாளர் நாட்ராயன் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் முக ஸ்டாலின், இறந்த உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாகவும் உத்தரவிட்டார்.