வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை..!
கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கோதுமை உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடான இந்தியா,கோதுமை ஏற்றுமதி தடை செய்திருப்பது உலக நாடுகளுக்கு ஒரு பேரிடியாக அமைந்துள்ளது.
இதற்கு ஜி7 நாடுகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.இதை போல எல்லோரும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதித்தால் அது நெருக்கடியை ஏற்படுத்தும் என ஜெர்மன் விவசாயத்துறை அமைச்சர் செம் ஓம்டெமிர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் காரணமாக உலகளாவிய விவசாய சந்தைகள் கடுமையான அழுத்தத்தில் இருக்கும் இச்சூழலில், இத்தகைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று உலக நாடுகளை ஜி7 குழுவைச் சேர்ந்த விவசாயத்துறை அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜி20 அமைப்பின் ஓர் உறுப்பினராக உள்ள இந்தியா, தனது பொறுப்பை உணர்ந்து அதனை ஏற்க வேண்டும் என நாங்கள் அழைக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஜூன் மாதம் ஜெர்மனியில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் இந்த விவகாரம் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.