பிப்ரவரி 14 பசுவை கட்டியணைப்பு தினம் வாபஸ் - காதலர்கள் உற்சாகம்
பிப்ரவரி 14 காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில் அன்றைய தினம் பசுவை கட்டியணைக்கும் தினமாக அறிவித்த நிலையில் அதனை இந்திய விலங்குகள் நல வாரியம் வாபஸ் பெற்றுள்ளது.
பசு கட்டியணைப்பு தினமாக அறிவிப்பு
உலகம் முழுவதும் ஆண்டு தோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மட்டுமல்லாமல் இந்த வாரத்தில் இருந்தே சாக்லேட் தினம், காதலை சொல்லும் தினம், பரிசு வழங்கும் தினம், முத்தம் கொடுக்கும் தினம், கட்டிப்பிடிக்கும் தினம் வரிசையாக கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய விலங்குகள் நல வாரியம் ஓர் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. அதில் வரும் பிப்ரவரி 14ஆம் தேதியானது பசுக்களை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறும் தினமாக கொண்டாட வேண்டும் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தியா மேற்கத்திய நாட்டு கலாசாரத்தால் வேதகால பண்பாடு அழிந்து வருவாதாகவும், நமது கலாசாரம் பண்பாடு மறக்கக்கடிக்கப்பட்டு விட்டதாகவும் கூறி, பசுக்களை கட்டிப்பிடிப்பதன் மூலம் மன ரீதியான வளம் அதிகரிக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
கிளம்பிய எதிர்ப்பு
இந்த அறிவிப்பை கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், எதிர்ப்புகள் கிளம்பின. மதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவில் ‘மகிழ்ச்சி பொங்க’ இரண்டு வழிமுறைகளை ஒன்றிய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதானியை மோடி அணைப்பார். மக்கள் பசுவை அணைக்க வேண்டும். இதுவல்லவோ அரசு,” என்று தனது விமர்சனத்தை முன்வைத்து இருந்தார்.
பின்வாங்கிய விலங்குகள் நல வாரியம்
இந்த நிலையில், மீண்டும் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ள இந்திய விலங்குகள் நல வாரியம் பிப்ரவரி 14, 2023 அன்று பசு அணைப்பு தினத்தை கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து இந்த அறிவிப்பை பார்த்த காதலர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.