நீட் தேர்வில் மதிப்பெண் குறைவு - மகளை அடித்தே கொன்ற தந்தை!
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை அவரது தந்தை அடித்து கொலை செய்துள்ளார்.
மதிப்பெண் குறைவு
மகாராஷ்டிரா, நெல்கரஞ்சி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சாதனா போஸ்லே. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை தோண்டிராம் போஸ்லே. பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
சாதனா நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் அவர் பங்கேற்ற நிலையில், தேர்வு முடிவு வெளியானபோது குறைவான மதிப்பெண்களே பெற்றுள்ளார். மேலும் இதுகுறித்து கேட்கையில், மகள் எதிர்த்து பேசியதாக கூறப்படுகிறது.
தந்தை வெறிச்செயல்
இதனால் ஆத்திரமடைந்த தோண்டிராம், அருகில் கிடந்த கிரைண்டர் கல்லில் பொறுத்தப்பட்டிருந்த கட்டையை உருவி மகள் என்றும் பாராமல் சரமாரியாக தாக்கியுள்ளார். இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தியுள்ளார். பின் காலையில் தோண்டிராம் பள்ளியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளார்.
அவர் பள்ளியில் இருந்து திரும்பி வந்தபோது சாதனா மயங்கி கிடந்துள்ளார். உடனே பெற்றோர் இருவரும் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சாதனாவின் தாயார் இதுகுறித்து காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் தோண்டிராமை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.