4 வயது மகன் பெட்ரோல் ஊத்தி எரிப்பு - மது போதையால் தந்தை செய்த கொடூரம்
4 வயது மகனை பெட்ரோல் ஊத்தி தந்தை தீ வைத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
மதுப்பழக்கம்
மதுரையை சேர்ந்த திருமலைச்செல்வன் சுகன்யா தம்பதிக்கு 7வயதில் ஒமிஷா என்ற மகளும், 4 வயதில் நிகில் என்ற மகனும் உள்ளனர். திருமலைச்செல்வன் அடிக்கடி மது அருந்தி வந்து சுகன்யாவை அடித்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சுகன்யா தனது இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு, ஒரு மாதத்திற்கு முன்பாக ஈரோட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பெட்ரோல் ஊத்தி எரிப்பு
ஒரு மாதத்திற்கு பின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக ஈரோடுக்கு வந்த திருமலை செல்வன், சுகன்யாவை தன்னுடன் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், ஆத்திரம் அடைந்த திருமலை செல்வன் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மனைவி மற்றும் இரு குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் மனைவி மற்றும் மகள் விலகிவிட, 4 வயது மகனான நிகில் மீது தீப்பற்றி எறிந்துள்ளது. தீப்பற்றிய வேதனையில் மகன் அலறி துடித்த நிலையில், சுகன்யா கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைத்து விட்டு சிகிச்சைக்காக குழந்தையை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
70% தீ காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. இதுகுறித்து சுகன்யா ஈரோடு வீரப்ப சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமலைச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது பழக்கத்தால் தந்தையே பெற்ற மகனை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.