தேர்தலில் போட்டியிடுவதற்காக பெற்ற மகளை கொன்ற தந்தை
இந்தியாவின் மகாராஷ்டிராவை சேர்ந்த பாண்டுரங்க கொண்டமங்கலே என்பவர் பெற்ற மகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் கேரூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்க கொண்டமங்கலே, தனது கிராமத்தில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார்.
இவருக்கு மூன்று குழந்தைகள், மகன் ஒருவரும், இரட்டை பெண் குழந்தைகளும் ஆவர்.

விரைவில் அவரது கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் வரவுள்ளது, தற்போதைய தலைவரான கணேஷ் ஷிண்டே, பாண்டுரங்கவை தேர்தலில் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஆனால் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட மூன்று குழந்தைகள் இருந்தால் தகுதியற்றவர்கள் என்ற விதி உள்ளது. இதனால் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்ற பயத்தில் இருந்த பாண்டுரங்க, கணேஷ் ஷிண்டேவுடன் சேர்ந்து சதித்திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார்.
இதன்படி தான் பெற்ற இரட்டை குழந்தைகளில் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டார். குழந்தை பிராச்சியை பைக்கில் அழைத்து சென்றனர், தெலுங்கானாவின் நிஜாம்சாகர் கால்வாயில் தள்ளிவிட்டதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
குழந்தையின் சடலத்தை பார்த்த மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர், சிறுமியின் உடலை கைப்பற்றி பொலிசார் விசாரணை நடத்தியதில் குற்றவாளிகள் சிக்கினர்.
இவர்கள் கைது செய்துள்ள பொலிசார் மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ளனர்.
