ஃபரூக் அப்துல்லாவின் எல்லை பிரச்சணைகளின் தாக்கமும், அரசியலும்!
டாக்டர் ஃபரூக் அப்துல்லா ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் தேசிய மாநாட்டின் தலைவரான ஷேக் அப்துல்லா - அக்பர் ஜெகான் பேகம் தம்பதிக்கு 1937ல் பிறந்தார்.
குடும்பம்
டாக்டர் ஃபரூக் அப்துல்லா பிரிட்டிஷ் நாட்டு செவிலியரான மோலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு1 மகன் 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் தான் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆவார்.
அவரது மகள்களில் ஒருவரான சாரா பிரபல காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சச்சின் பைலட்டை திருமணம் செய்து கொண்டார். டின்டேல் பிஸ்கோஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு மருத்துவராக பணியாற்றினார்.
அரசியல் வாழ்க்கை
தொடர்ந்து, 1970ல் அவரது தந்தை ஷேக் அப்துல்லாவால் நிறுவப்பட்ட ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணைந்து செயல்பட்டார். பின்பு1981ல் மாநில தேசிய மாநாட்டின் தலைவரானார். 1982 ஆம் ஆண்டு அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக அதே ஆண்டு செப்டம்பர் 8 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குலாம் முகம்மது ஷா கட்சியில் இருந்து பிரிந்ததால் அப்துல்லாவின் ஆட்சி கலைந்தது. 1984 ம் ஆண்டு முதல்வர் பதவியிலிருந்து விலகினார். மீண்டும் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று 1986 ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்றார். 1990 ம் ஆண்டு வரை இந்த பதவியில் பணியாற்றினார். மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் முதலமைச்சராக 1996ல் தேர்ந்தெடுக்கப்பட்டு 2002ம் ஆண்டு வரை முதல்வராக பணியாற்றினார்.
தேசிய மாநாட்டுக் கட்சி
அதன்பின் 2002ல் ராஜ்யசபாவுகக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய மாநாட்டின் தலைவராக பதவியேற்றார். அவரது மகன் ஓமர் கட்சிக்கு பொறுப்பேற்றார். 2009 மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் 2009 ல் மாநிலங்களவையில் இருந்து ராஜினாமா செய்தார். மீண்டும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2014 மக்களவை தேர்தலில் மீண்டும் ஸ்ரீநகர் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தாரிக் ஹமீத் கர்ராவால் தோற்கடிக்கப்பட்டார். 2017ல் ஸ்ரீகநகர் லோக்சபா தொகுதி இடைத் தேர்தலில் ஃபரூக் அப்துல்லா மக்கள் ஜனநாயக் கட்சியின் நசீர் அகமது கானை வீழத்தி வெற்றிபெற்றார். ஆகஸ்ட் 2019 இல், ஜம்மு-காஷ்மீரை தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து இரண்டாகப் பிரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தபோது,
வீட்டுக் காவல்
மாநிலத்தின் மற்ற அரசியல் தலைவர்களுடன் ஃபரூக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். செப்டம்பரில் அவர் சார்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு பொது ஒழுங்கிற்கு இடையூறு விளைவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அவரது தடுப்பு உத்தரவு காலாவதியானதை அடுத்து மார்ச் 2020 இல் விடுவிக்கப்பட்டார். 2022ல், இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன், மம்தா பானர்ஜி மற்றும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக அப்துல்லாவின் பெயரை முன்மொழிந்தனர்.
ஆனால் அப்துல்லா இந்த வாய்ப்பை நிராகரித்து, தான் இன்னும் பல ஆண்டுகள் தீவிர அரசியலில் இருக்க விரும்புவதாகவும், காஷ்மீர் யூனியன் பிரதேச பிரச்சனையில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில், 2001 முதல் 2011 வரை ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஒதுக்கப்பட்ட நிதியில் 112 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக பரூக் அப்துல்லா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
பணமோசடி வழக்கு
இந்த வழக்கில் பரூக் அப்துல்லாவின் 12 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை ஏற்கனவே கையகப்படுத்தியது. இந்நிலையில் ஸ்ரீநகர் கோர்ட்டில் பரூக் அப்துல்லாவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அமலாக்க இயக்குனரகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பணமோசடி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியது. கடைசியாக இந்த வழக்கில் பரூக் அப்துல்லா 2022, மே மாதத்தில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி இருந்தார்.
இந்தியா, பாகிஸ்தான் எல்லை பிரச்சினைகளில் இவருடைய தாக்கம் அதிகமிருந்தது மறுக்கமுடியாத ஒன்று. ஒரு மருத்துவராகவும், அரசியல்வாதியாகவும் டாக்டர் பி.சி. ராய் விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.