விவசாய நிலத்தில் வைரம்; பெண் ஒருவருக்கு அடித்த அதிர்ஷ்டம் - மதிப்பு ரூ.12 லட்சம்!
பெண் விவசாயி ஒருவருக்கு விளை நிலத்திலிருந்து 12 லட்சம் மதிப்புள்ள வைரம் கிடைத்துள்ளது.
விவசாய நிலத்தில் வைரம்
ஆந்திர மாநிலம் கர்னூல் என்ற மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் மழைக்காலத்தின்போது விவசாய நிலங்களில் வைரங்கள் கிடைப்பது வழக்கமாக இருக்கிறது. அங்கு மழை பெய்யத் தொடங்கியதும் அப்பகுதி மக்கள் தீவிர வைரம் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவார்கள்.
பழங்காலம் முதலே ஆந்திராவின் ராயல் சீமா பகுதியில் இது போல் விளைநிலங்களில் வைரம் உள்ளிட்ட நவரத்தினங்கள் கிடைப்பதால் இந்த பகுதிக்கு ராயலசீமா ரத்தனால சீமா என்ற பெயரும் உள்ளது. இதைத்தொடர்ந்து வட மாநில வியாபாரிகளும் கர்னூல் மாவட்டத்தில் வைரம் கிடைத்தவர்களிடம் வந்து ரகசியமாக வைரத்தை வாங்கி செல்வார்கள்.
12 லட்சம் மதிப்புள்ள வைரம்
இந்நிலையில் அந்த மாவட்டத்தில் உள்ள ஜே எறகுடி என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரின் விவசாய நிலத்திலிருந்து ஒரு வைரம் கிடைத்திருப்பதாக தகவல் வெளியானது. அந்த வைரத்தை வியாபாரி ஒருவர் வாங்கிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மதிப்பு ரூ.12 லட்சம் என்று சொல்லப்படுகிறது . இதனால் அப்பகுதியில் உள்ள மற்ற பொது மக்களும் தீவிர வைர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.