இந்தாண்டுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுகிறாரா தோனி : பதிலை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!
கடந்த மார்ச் 26-ம் தேதி இந்தியாவில் கோலாகலமாக தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் கொரோனா பரவல், அம்பயர்களின் தீர்ப்பு சர்ச்சை, சாம்பியன் அணிகளின் தொடர் தோல்வி என பல பரபரப்புகளை கடந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
மொத்தம் 10 அணிகள் போட்டியிட்ட இத்தொடரில் முதல்முறையாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. மற்ற 2 இடங்களுக்கு பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, ஹைதராபாத் அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
மும்பை, சென்னை, கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இதில் முன்னாள் சாம்பியனான மும்பை அணி 13 போட்டிகளில் ஆடி 3 வெற்றி, 10 தோல்விகளுடன் கடைசி இடத்தையும், நடப்பு சாம்பியன் சென்னை அணி 13 போட்டிகளில் ஆடி 4 வெற்றி, 9 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தையும் பெற்றுள்ளது.
சென்னை 9-வது இடத்தில் நீடிக்க வேண்டும் என்றால் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்த வேண்டும். அப்படியே தோற்றாலும் மோசமான தோல்வியாக இருக்கக்கூடாது. இல்லையென்றால் அந்த இடத்துக்கு சிக்கல் வந்து விடும்.
இந்நிலையில் சென்னை அணிக்கு இந்த சீசனில் இன்றே கடைசி போட்டி என்பதால் #MSDHONI,#DefinitelyNot போன்ற ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளது: கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து ‘ஓய்வு பெற போகிறீர்களா’ என கேள்வி எழுப்பி வரும் வர்ணனையாளர்களுக்கு ஒற்றை வரியில் பதிலடி கொடுத்து வந்த தோனி இன்று என்ன சொல்லப் போகிறார் என ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.