நாகப்பட்டினத்தில் பிறந்து தமிழ்நாட்டையே ஆண்ட பிரபலங்கள் குறித்து தெரியுமா?
தென்னிந்தியாவின் முக்கிய இடமான நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிறந்த இந்த பிரபலங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
இரா. நெடுஞ்செழியன்
நெடுஞ்செழியன் ஒரு அரசியல்வாதியும் இலக்கியவாதியும் ஆவார். நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் ஜூலை 11, 1920ல் பிறந்தார். இவர் தமிழகத்தின் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் மாற்று முதலமைச்சராகவும் பதவி வகித்தவர்.
தமிழகத்தின் இரு கழகங்களான திராவிட முன்னேற்ற கழகத்திலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலும் பொதுச்செயலாளராகவும், நிதியமைச்சராகவும் இருந்த பெருமைக்குரியவர் அவர் நெடுஞ்செழியன். பாராட்டு விழாவின் போது அண்ணாதுரை, இவருக்கு 'நாவலர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார்.
1977-இல் அஇஅதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராகவும் சிலகாலம் இருந்தார். பின்னர், 1977 முதல் 1978ஆம் ஆண்டு வரை செயல் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். 1978 முதல் 1980 வரை அக்கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். இதுவரை தமிழ்நாடு அரசின் இடைக்கால முதலமைச்சராக இருந்த ஒரே நபர் இவர் மட்டுமே. 3 முறை இடைக்கால முதலமைச்சராக இருந்தவர் இந்தியாவில் இவர் ஒருவர் மட்டுமே. இவர் ஜனவரி 12, 2000ம் ஆண்டு மறைந்தார்.
கலைஞர் மு.கருணாநிதி
திமுக இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்னும் சிறு கிராமத்தில் ஜூன் 3ஆம் தேதி, 1924ஆம் ஆண்டு, முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தார். கருணாநிதி தமிழக முதல்வராக 5 முறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார்.
1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தம்முடைய 94ம் வயதில் காலமானார்.
கிருஷ்ணகுமார்
கிருஷ்ணகுமார் ஒரு திரைப்பட இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் ஆவார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஜனவரி 8, 1987ம் ஆண்டு பிறந்தார். 2010ம் ஆண்டு யுத்தம் செய் திரைப்படத்தில் இயக்குனர் மிஸ்கினால் அறிமுகப்படுத்தப்பட்டார்.
அப்படத்தின் வெற்றிக்குப்பிறகு ஆரோகனம், முகமூடி (2012) ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
ஓ. எஸ். மணியன்
ஓ. எஸ். மணியன் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஓரடியம்புலதில் 29 ஏப்ரல் 1954ம் ஆண்டு பிறந்தார். இவர் 1995 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டுவரை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
இவர் அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக பதவி வகித்து உள்ளார். வேதாரண்யம் தொகுதியிலிருந்து, 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு கைத்தறித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.
மறைமலை அடிகள்
மறைமலை அடிகள் புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர் ஆவார். இவரின் இயற்பெயர் வேதாசலம் பிள்ளை. நாகப்பட்டினம் அருகே காடம்பாடி கிராமத்தில் சொக்கநாத பிள்ளைக்கும் சின்னம்மாளுக்கும் மகனாக ஜூலை 15, 1876-ல் பிறந்தார். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர்.
சிறப்பாகத் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர். இறுதிக்காலத்தில் பல்லாவரத்தில் காவியுடை அணிந்து துறவுக் கோலத்தில் இருந்தார். செப்டம்பர் 15, 1950-ல் தமது 75 வயதில் காலமானார்.
கே. கோபால்
கே. கோபால் ஒரு மருத்துவா் (MBBS,DCH,PG.Dip.Diab) மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் நாகப்பட்டினம் மாவட்டம், கிடாங்களாம் என்ற இடத்தில் 10 நவம்பர் 1959ம் ஆண்டு பிறந்தார்.
இவர் நாடாளுமன்றத்துக்கு (1991) தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக 2014ல் அண்ணா திராவிடமுன்னேற்ற கழகம் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இவா் முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் திரு.வேதையன் அவா்களின் பேரன் ஆவாா்.
சர்தார் வேதரத்தினம் பிள்ளை
சர்தார் வேதரத்தினம் பிள்ளை இந்திய விடுதலை இயக்க வீரரும், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவரும், கொடைவள்ளலும் ஆவார். இவர் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 25 பிப்ரவரி 1897ம் ஆண்டு பிறந்தார். 14 ஆண்டுகள் சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டவர். பிரித்தானிய இந்திய அரசின் உத்தரவை மீறி, இராஜாஜி தலைமையில் 30 ஏப்ரல் 1930 அன்று நடைபெற்ற வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சர்தார் வேதரத்தினம் பிள்ளை பெருமளவில் உதவியதால் ஆறு மாத சிறை தண்டனைக்கு ஆளானவர்.
வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் வேதரத்தினம் பிள்ளை ஆற்றிய அளப்பரிய பங்கினைப் பாராட்டி, 1931-ஆம் ஆண்டில், திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்தார் (தலைவர்) எனும் பட்டமளித்து மரியாதை செய்யப்பட்டார். 1946-இல் வேதாரண்யத்தில் கஸ்தூரிபாய் காந்தி கன்னிய குருகுலம் எனும் கிராமிய மகளிர் மேம்பாட்டுத் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். இத்தொண்டு நிறுவனத்தின் ஆதரவற்றோர் இல்லம், கைவிடப்பட்ட பெண் குழந்தைகளுக்கு உணவு, உடை, இருப்பிடம், கல்வி வழங்கி வருகிறது. மகாத்மா காந்தி அறிவித்த பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறை சென்றவர் தியாகி வேதரத்னம் பிள்ளை. இவரது தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக இந்திய அரசு கடந்த பிப்ரவரி 25, 1998 அன்று இரண்டு ரூபாய் நினைவு அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறை வெளியிட்டு பெருமைப்படுத்தியது. இவர் 24 ஆகஸ்ட் 1987ம் ஆண்டு இறந்தார்.