மேற்குத் தொடர்ச்சி மலை, தேன் திரைப்பட வசனகர்த்தா காலமானார் - திரையுலகினர் இரங்கல்!

Jiyath
in பிரபலங்கள்Report this article
எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தாவான ராசீ.தங்கதுரை இருதய பிரச்சினை காரணமாக உயிரிழந்துள்ளார்.
ராசீ.தங்கதுரை
தேனி மாவட்டம் கதிர்நரசிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தாவான ராசீ.தங்கதுரை.(53). இருதய பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.
அவரின் உடல் இன்று மாலை ஆண்டிபட்டி கதிர்நரசிங்காபுரம் கிராமத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த ராசீ.தங்கதுரை இலக்கியத்தின் மீதிருந்த ஆர்வத்தால் சிறு வயதிலேயே கவிதை, கதை எழுதுவதில் நாட்டம் கொண்டு சுமார் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். இவரின் 'பொய்யா குலக்கொடி' என்ற நாவல் பிரபலமானது.
திரைத்துறையினர் இரங்கல்
கடந்த 2018ம் ஆண்டு விஜய்சேதுபதி தயாரிப்பில், லெனின் பாரதி இயக்கத்தில் வெளியான 'மேற்குத் தொடர்ச்சி மலை' என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர் ராசீ தங்கதுரை. மேலும், பல விருதுகளை வென்ற ‘தேன்’ திரைப்படத்திற்கும் ராசீ தங்கதுரை வசனம் எழுதியிருந்தார்.
அந்தப் படத்தில் சிறு கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவும் செய்திருந்தார். இதனை தொடர்ந்து கெவி, தாக்கல், ஆதாரம் உள்ளிட்ட படங்களுக்கும் வசனகர்த்தாவாக ராசீ. தங்கதுரை பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.