மூன்று தலைமுறையாக ஆசிரியர்கள் - சீர் வரிசை தூக்கி விழா நடத்திய பேரன் பேத்திகள்!
தமிழர் பாரம்பரிய கலைகளை போற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் நடனம் பாடிக்கொண்டு தங்களது மூத்த வழிகாட்டிகளுக்கு சீர் வரிசை தூக்கி வரவேற்ற மகன் மகள் மற்றும் பேரன் பேத்திகள்..
மூன்று தலைமுறை
மதுரை மாவட்டம் பரவை அருகில் தனியார் மண்டபத்தில் மூன்று தலைமுறையாக ஆசிரியராக இருக்கும் குடும்பத்தில் மூத்தவர்களை வணங்கி ஆசி பெரும் நிகழ்ச்சி மற்றும் வாழ்வின் வழிகாட்டிய அவர்களுக்கு நன்றி தெரிவித்து கௌரவப்படுத்தும் விழா அவர்களது மகன் மகள் பேரன் பேத்திகளால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் விறுவீடு உசிலம்பட்டி அருகே உள்ள நாகையகவுண்டன்பட்டி கிராமத்தில் வசித்த ஜெகநாதன் கிருபை அம்மாள் இவர்களின் வழிவந்த மாணிக்கம் மங்கலம் ஆகியோரின் மகன் மகள்கள் மற்றும் பேரன் பேத்திகள் ஆகியோர் தன்னை வழி நடத்திய பெரியோர்களுக்கும் மற்றும் குடும்பத்தார்களுக்கும் நன்றி தெரிவிக்கவும்
அவர்களிடம் ஆசி பெறவும், உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து அழைத்து விழா ஏற்பாடு செய்தனர். இவ்விழாவில் தமிழ் பாரம்பரிய கலைகளை போற்றும் வகையில் ஒயிலாட்டம் கரகாட்டம் தப்பாட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் மற்றும் சிறுவர்கள் சிலம்பாட்டம் புலியாட்டம் கொண்ட கலை நிகழ்ச்சிகளுடன் மகன்கள் பேரன்பேத்திகள் என மூன்று தலைமுறையை சேர்ந்த அனைவரும் மேளதாளங்களுடன் ஆட்டம் ஆடிக்கொண்டு சீர் வரிசை எடுத்து வந்தனர்.
நெகழ்ச்சி சம்பவம்
பின்பு பெரியோர்களான ஜீவானந்தம் கிரேஸ் ஞானசௌந்தரி ஸ்டெல்லா ராணிu மற்றும் ஆனந்தி பொற்செல்வி ஆகியோரை மேடைக்கு அழைத்து குத்துவிளக்கேற்றி அவர்களுக்கு மாலை மற்றும் மகுடம் அணிவித்து அவர்களை கௌரவம் செய்து அவர்களிடம் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
இந்த விழாவிற்காக அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மகன்கள் மகள்கள், பேரன்பேத்திகள், கொள்ளு பேரன்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெரியவர்களின் ஆசி பெற்றனர்.
தற்போது உள்ள தலைமுறையினருக்கு மத்தியில் தமிழ் பாரம்பரியத்தை காப்பாற்றும் வகையில் எடுத்துக்காட்டாகவும், முன் மாதிரியாகவும் இவ்விழா நடைபெற்றது. தாய் தந்தையினரையே முதியோர் இல்லத்தில் சேர்க்கும் இக்காலத்தில் மூன்று தலைமுறைக்கு மூத்த பெரியோர்களை கௌரவிக்கும் வகையில், பெருமைப்படும் அளவிற்கு விழா ஏற்பாடுகள் செய்து அவர்களிடம் ஆசி பெற்ற நிகழ்வு அப்பகுதியில் மகிழ்ச்சியையும் நெகழ்ச்சியையும் ஏற்படுத்தியது.