ஆட்சியர் பெயரிலேயே போலி பேஸ்புக் கணக்கை தொடங்கிய மோசடி கும்பல்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக பலரின் பேஸ்புக் கணக்குகளை போன்று போலி கணக்கு தொடங்கி பண மோசடியில் ஈடுபடும் கும்பல் செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
எப்போதும் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவரை ஏராளமானோர் பின்பற்றுகின்றனர். இந்தப் போலி கணக்கின் மூலம் பலரிடமும் பணம் கேட்கப்பட்டுள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த நபர்கள் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு இந்த விஷயத்தைக் கொண்டு சென்றுள்ளனர்.
உடனடியாக போலி கணக்கு தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் , பேஸ்புக் தளத்திற்கும் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் விளக்கம் கொடுத்துள்ளார்.
மேலும் , தன்னுடைய பெயரில் வரும் இதுபோன்ற தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.