MKStalin70 - கதாநாயகன் முதல் முதலமைச்சர் வரை : முதல்வர் ஸ்டாலின் பற்றிய ருசிகரத் தகவல்கள்
முதலமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்த முக்கியத்தகவல்களை பற்றி கூறலாம்.
மு.க.ஸ்டாலினுக்கு பள்ளிப் பருவத்திலேயே அரசியலில் அதீத ஈடுபாடு ஏற்பட்டது. பள்ளிபடிக்கும் போதே தனக்கென ஒரு நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி கட்சிப் பணிகள் மேற்கொண்டார் ஸ்டாலின்.
பொதுப்பணித்துறை அமைச்சர் மகன் என்பதே தெரியாத அளவுக்கு படிக்கும் காலத்தில் பள்ளியில் அடக்கம். கருணாநிதி அழைக்காமலேயே அரசியலுக்கு தாமாக விரும்பி வந்தவர் ஸ்டாலின். திமுகவுக்காக ஊர் ஊராக சென்று உதயசூரியன் என்ற பெயரில் நாடகம் நடத்தி பிரச்சாரம் செய்தார்.
திருமணம் முடித்த 6 மாதங்களில் மிசா சிறைவாசியானார். தாம் பகுத்தறிவுவாதியாக இருப்பினும் மனைவி கோவிலுக்கு செல்வதற்கு எந்த தடையும் போடாதவர் ஸ்டாலின். சென்னை மேயராவதற்கு முன்பு வரை தனது காருக்கு ஓட்டுநர் வைத்துக் கொள்ளாமல் தாமே தனது காரை ஓட்டினார் .
எப்போதும் கூச்ச சுபாவம் உடைய ஸ்டாலின், மேயராகிய பின்பு தான் கூச்சத்தை நீக்கி பொதுவிடங்களில் பேச துணிந்தார்.
வி.பி.சிங் பிரதமராக இருந்த போது ஸ்டாலினின் கட்சி செயல்பாட்டையும், ஆர்வத்தையும் பாராட்டியுள்ளார். அமெரிக்கா, துபாய், கத்தார், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான்,லண்டன், உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார்.
ஆண்டுதோறும் மே மாதம் கோடை காலம் வந்துவிட்டால் தனது பேரன், பேத்திகளோடு குறைந்தபட்சம் 2 நாட்களாவது ஊட்டி, கொடைக்கானல் என சுற்றுலா சென்று அவர்களுடன் நேரத்தை செலவிடுவார்.
பல டென்ஷன்கள், பிரச்சனைகள் இருப்பினும் வீட்டிற்கு சென்றுவிட்டால் பேரன், பேத்திகளுக்கு சிறிது நேரம் ஒதுக்கி அவர்களுடன் நேரம் செலவிடுவதை விரும்புவார். தனது மகன் உதயநிதி ஸ்டாலின் காதல் திருமணத்தை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு நடத்தி வைத்தார்.
மகன், மகள் மீது பாசம் வைத்திருப்பதை போலவே மருமகள் கிருத்திகா மீதும், மருமகன் சபரீசன் மீதும் ஸ்டாலின் அதிகம் பாசம் காட்டுவார்.
தனது பேரன் பேத்திகளுக்கு தமிழ் பெயர் சூட்டியுள்ளதோடு கட்சி நிர்வாகிகளிடமும் தமிழ் பெயர் சூட்ட வலியுறுத்துவார். 1973-ம் ஆண்டு தி.மு.க-வின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1976-ம் ஆண்டு `மிசா’ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு ஓராண்டுக்காலம் சிறையில் அடைக்கப்பட்டார். 1980-ம் ஆண்டு தி.மு.க-வின் இளைஞரணி தொடங்கப்பட்டு அதன் ஏழு அமைப்பாளர்களில் ஒருவராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.
2006-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பதவியேற்றார். 2008-ம் ஆண்டு தி.மு.க-வின் பொருளாளராகப் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் துணை முதலமைச்சராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.
2016 சட்டமன்றத் தேர்தலில் 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.
2017-ம் ஆண்டு தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு தி.மு.க பொதுக்குழுவின் மூலம் அக்கட்சியின் செயல் தலைவரானார்.
2018 தி.மு.க தலைவர் கருணநிதியின் மறைவுக்குப் பிறகு, தி.மு.க தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
2021 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தற்போது முதலமைச்சராக உள்ளார்.
ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது அவர் கொண்டுவந்த நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
குறிப்பாகச் `சிங்காரச் சென்னை’ என்ற முழக்கத்தை முன்னெடுத்து, ஒன்பது மேம்பாலங்கள், 49 குறும்பாலங்கள், பூங்காக்கள், நீரூற்றுகள், மெரினா கடற்கரையை அழகுபடுத்தல், சாலை விரிவாக்கம் என அவர் செய்த அனைத்து விஷயங்களும் தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக அமைந்தன
ஸ்டாலினை பொறுத்தவரை பயணம் செல்வதற்கு துளியும் சலிக்க மாட்டார் வெளியூர் சுற்றுப்பயணங்களின் போது கட்சியினரை, மக்களை சந்திப்பதில் அலாதி பிரியம் கொண்டவர்.
கட்சி நிர்வாகிகளுக்கு திடீர் போன் அடித்து சர்ப்ரைஸ் தருவார். துணை முதல்வராக இருந்த காலத்தில் தினமும் காலை ஒரு மணி நேரம் கட்டாயம் பொதுமக்களை சந்தித்துவிட்டு தான் கோட்டைக்கு புறப்படுவார்.
மு.க.ஸ்டாலின் ஒரு எம்.ஜி.ஆர் ரசிகர். தொடக்ககாலத்தில் அவரை அழைத்து சென்று பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் ஸ்டாலின் தினமும் சென்னை ஐஐடி வளாகத்தில் காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வார் ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட புதிதில் குறிஞ்சிமலர் உள்ளிட்ட ஒன்றிரண்டு சீரியல்களிலும் ஸ்டாலின் நடித்தார்.