மார்க்ஸிஸ்ட் கட்சியின் சிவப்பு சூரியன் காம்ரேட் ஜோதி பாசு - சிறப்பு பகிர்வு!
ஜோதிபாசு என்ற பெயரைச் சொன்னாலே, அச்சம் அல்லது பெருமிதம் கொள்பவர்கள்தாம் உண்டு. மாபெரும் கம்யூனிசத் தலைவராக, அசைக்க முடியாத இரும்பு மனிதராக விளங்கியவர்.
ஜோதி பாசு
கொல்கத்தாவில் கடந்த 1914ம் ஆண்டு ஜுலை 8ம் தேதி அன்று ஜோதிபாசு பிறந்தார். அவரது தந்தை நிஷிகந்தா பாசு, ஒரு டாக்டர். தாயார் பெயர் ஹேமலதா. மிகவும் கட்டுப் பெட்டியான குடும்பத்தில் பிறந்த ஜோதிபாசு, 1920 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள லொரெட்டோ பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளிக் கல்வியை கொல்கத்தாவில் முடித்த அவர், 1935 ம் ஆண்டு பாரிஸ்டர்’ பட்டம் படிப்பதற்காக லண்டன் சென்றார்.
கம்யூனிஸ்ட்
அந்தச் சமயத்தில், இந்திய சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்தது. எனவே, லண்டனில் இருந்தபடியே அங்கிருந்த இந்திய மாணவர்களுடன் இணைந்து ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக ஜோதிபாசு போராடினார். அதன் தொடர்ச்சியாக, இங்கிலாந்தில் உள்ள கம்யூனிச தலைவர்களின் நெருக்கம் அவருக்குக் கிடைத்தது. ரஜினி பாமிதத் உள்ளிட்ட தலைவர்களின் வழியில் கம்யூனிஸ்டு பாதையில் நடக்க ஆரம்பித்தார்.
ஜோதிபாசு தன் வாழ்நாளில் அடக்குமுறைகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிர் கொண்டிருக்கிறார். பாசு கம்யூனிஸ்ட் இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்ட நிலையில், இ.எம்.எஸ், சுர்ஜித், பி.சுந்தரய்யா, பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள் அனைவருமே வசதியான வாழ்க்கையை உதறிவிட்டு வந்தவர்களே, தேசிய இயக்கத்தின் ஈர்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், நேதாஜி குறிப்பிட்ட முள் படுக்கையைத் தேர்ந்தெடுக்க இத்தகையத் தலைவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு இளம் தலைமுறைக்கு கற்றுத்தேற வேண்டிய ஒன்று.
மார்க்ஸிஸ்ட் கட்சியில்..
1946ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின்போது நடந்த வங்காள சட்டசபை தேர்தலில், ரயில்வே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதன் முதலில் களம் கண்ட தேர்தலில் வெற்றி வாகை சூடினார். அன்றிலிருந்து 2001 ம் ஆண்டு வரை மேற்கு வங்காள சட்டசபைக்குத் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். இடையே, 1972 ம் ஆண்டு மட்டும் தோல்வியடைந்தார்.
1962ம் ஆண்டில் சீனாவில் போர் நடந்தபோது கொள்கை ரீதியாக கம்யூனிஸ்டு கட்சியில் பிளவு ஏற்பட்டது. அப்போது, அவர் சிறையில் இருந்தார். பின்னர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து மார்க்ஸிஸ்ட் தோன்றியதும் அதில் அவர் இணைந்தார். இந்தியாவிலும் சரி, மேற்கு வங்காளத்திலும் சரி மார்க்ஸிஸ்ட் கட்சியை நிலை நிறுத்திய முக்கியத் தலைவர்களில் அவரும் ஒருவர்.
முதல்வர்
1989ம் ஆண்டிலும், 1996 ம் ஆண்டிலும் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா அல்லாத ஆட்சி மத்தியில் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் ஜோதிபாசு என்றால் அதுமிகையாகாது. 1969-75 காலகட்டத்தில் இந்திராகாந்தி ஏவிய அரைப் பாசிச அடக்குமுறைக்கும், 1975-77 காலகட்டத்தின் நெருக்கடி நிலைக் கொடுங்கோன்மைக்கும் முகங்கொடுத்து இயக்கத்தை கட்டிக் காத்தவர் ஜோதிபாசு.
1970 இல் இவரை பாட்னா ரயில்வே நிலையத்தில் கொல்ல முயற்சி நடந்தது. இவருக்கு பதிலாக வேறொரு தோழர் உயிர்த்தியாகம் செய்தார். அப்பொழுதும் தப்பித்து ஓடாமல் அந்த சுட்டவனை பிடியுங்கள் என அவனிருந்த திசையை காட்டினார். 1977 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோற்ற பின், அதே ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் இடது முன்னணி வெற்றி பெற்றது. ஜோதிபாசு முதல்வராகப் பொறுப்பேற்றார்.
23 ஆண்டு காலம்
1977 முதல், 2000ம் ஆண்டுவரை இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து 23 ஆண்டு காலம், மேற்கு வங்காள முதலமைச்சராக இருந்தார். இந்தியாவில் யாருமே இவ்வளவு நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தது கிடையாது. மேலும், தொடர்ந்து 23 ஆண்டு காலம் பதவியில் இருந்ததும் கிடையாது. அத்தகைய அபூர்வ சாதனையை ஜோதிபாசு நடத்திக் காட்டினார். 1996ம் ஆண்டில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளும் அல்லாத புதிய ஆட்சி அமையும் சூழ்நிலை மத்தியில் உருவானது.
அப்போது, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் தலைவர்கள் கூடி விவாதித்தனர். வி.பி.சிங் உள்பட பல்வேறு தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட நிலையில், மார்க்ஸிஸ்ட் கட்சித் தலைமையிலேயே ஆட்சி அமைக்கலாம் என்றும், ஜோதிபாசு பிரதமராகலாம் என்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் முடிவு செய்தனர்.
சிவப்பு சூரியன்
கட்சி பாகுபாடின்றி ஜோதிபாசுவுக்கு ஆதரவு பெருகியது. ஆனால், கூட்டணி ஆட்சிக்குத் தலைமை ஏற்பதில்லை’ என்ற கொள்கையைப் பின்பற்றி வருவதாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு கூறிவிட்டது. இரண்டு முறை அந்தக் குழு கூடியபோது, இந்த முடிவில் உறுதியாக இருந்தது. கட்சி எடுத்த அந்த முடிவால், ஜோதிபாசு பிரதமராகும் வாய்ப்பு பறிபோனது. தொடர்ந்து, மார்க்ஸிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ மற்றும் மத்திய கமிட்டியில் உறுப்பினராகத் தொடர்ந்து நீடித்து வந்தார்.
2000 ம் ஆண்டில் உடல் நலக்குறைவு காரணமாக பொலிட்பீரோ பதவியிலிருந்து அவர் விலகினாலும், கட்சி விடவில்லை. எனவே, கட்சியின் வற்புறுத்தல் காரணமாக 2008 ம் ஆண்டு வரை கட்சிப் பொறுப்பில் நீடித்தார்.
மறைவு
ஜனவரி 1,2010 அன்று உடல்நிலை மோசமானதால் கொல்கத்தா மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். ஜனவரி 17 அன்று உயிரிழந்தார். அவரது இறுதி விருப்பப்படி அவரது உடல் மருத்துவத் துறைக்குக் கொடையாக்கப்பட்டது.