இந்தியாவை தலைநிமிர வைத்த இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் வரலாறு..!
இந்தியாவை உலக நாடுகள் மத்தியில் தலைமிர வைத்த இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பிறப்பு
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவர்கலால் நேருவின் ஒரே மகள் இந்திரா காந்தி ஆவார். இவரின் இயற்பெயர் இந்திரா பிரிதர்சினி காந்தி. 1917 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி பண்டிட் ஜவர்ஹலால் நேருவுக்கும், கமலா நேருவுக்கும் மகளாக பிறந்தார்.
இந்திரா காந்தியின் தாத்தா மோதிலால் நேரு இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் ஒரு செல்வ வளம் மிக்க ஒரு வழக்கறிஞர் ஆவார். காந்திக்கு முந்தைய காலத்தில் இந்திய தேசிய காங்கிரசில் மோதிலால் நேரு மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார்.
படிப்பு
சுவிட்ஸ்ர்லாந்தின் பெக்ஸ் பகுதியிலுள்ள எக்கோல் நோவல், ஜெனிவாவிலுள்ள எக்கோல் இண்டர் நேஷனல், பம்பாய் மற்றும் பூனாவில் உள்ள பீப்பிள்ஸ் ஒன் ஸ்கூல், பிரிஸ்டாலிலுள்ள பேட்மிட்டன் ஸ்கூல், விஷ்வபாரதி, சாந்தி நிகேதன், ஆக்ஸ்போர்ட் சோமார்வில் கல்லூரி போன்ற சிறந்த கல்வி நிறுவனங்களில் அவர் கல்வி பயின்றார்.
பல்வேறு சர்வதேச பல்கலைகழகங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை அளித்துள்ளன. சிறந்த கல்வி பெற்ற குடும்பப் பின்னனியிலிருந்து வந்த அவருக்கு கொலம்பியா பல்கலைகழகம் உயர் நிலை பட்டம் (சைடேஷன் ஆப் டிஸ்டிங்கஷன்) அளித்துள்ளது.
திருமதி இந்திரா காந்தி சுதந்திர போராட்டத்தில் தன்னை தீவிரமாக ஈடுபத்திக் கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்தின் போது காங்கிரஸ் கட்சிக்கு உதவும் வகையில், தனது சிறு வயதிலேயே சர்க்கா சங்கத்தையும் 1930ல் வானர் சேனாவையும் நிறுவினார்.
திருமணம் - அரசியலில் நுழைவு
1942 செப்டம்பர் மாதம் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். காந்தியின் வழிகாட்டுதலில் தில்லியில் 1947ல் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவர் பணியாற்றினார்.
பின்னர் 1942 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி பெரோஸ் காந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.
இந்திரா காந்தி 1955 ஆம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழு கமிட்டியில் உறுப்பினராக இணைந்தார். பின்னர் 1958 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் மத்திய நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
மேலும் அனைத்திந்திய இளைஞர் காங்கிரஸ் குழு தேசிய ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக இருந்தார். 1964 முதல் 1966 வரை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
அவசர நிலை அறிவிப்பு
1966 ஜனவரி முதல் 1977 மார்ச் வரை இந்தியாவின் மிகஉயரிய பதவியான பிரதமர் பொறுப்பை எற்றார். 1967-ல் செப்டம்பர் முதல் 1977 மார்ச் வரை மத்திய அணுசக்தி துறையின் அமைச்சராகவும் இருந்தார். கூடுதலாக 1967, செப்டம்பர் 5 முதல் 1969 பிப்ரவரி 14 வரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
1970 ஜூன் முதல் 1973 நவம்பர் வரை மத்திய உள்துறை அமைச்சராகப் பணி புரிந்தார். 1975 ஆம் ஆண்டு அவசர நிலையை அறிவித்தார் இந்திரா காந்தி. அரசியல் சட்டத்தின் 352 ஆவது விதியை பயன்படுத்தி தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.
19 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலைமை இந்திரா காந்தியின் செல்வாக்கை பெருமளவு பாதித்தது. எனினும் தனது செல்வாக்கை பிழையாக மதிப்பீடு செய்த இவர், தேர்தலை நடத்திப் பெருந் தோல்வியைத் தழுவினார்.
இவரது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார். இவருக்கு வாரிசாக வளர்க்கப்படுவதாகச் சொல்லப்பட்ட இவரது இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியும் தோல்வியைத் தழுவினார்.
எனினும் இவரது கட்சிக்கு மாற்றாகப் பதவியில் அமர்ந்த பல கட்சிக் கூட்டணி, உட்பூசல்கள் காரணமாக அதன் முழுப் பதவிக்காலத்தையும் நிறைவு செய்ய முடியாமல் மூன்று ஆண்டுகளில் கவிழ்ந்தது.
சுட்டுக் கொலை
இவ்வாறு எதிர்க்கட்சிகளின் இயலாத்தன்மை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதனால், அடுத்து நடைபெற்ற தேர்தலில் இந்திராவையே மக்கள் மீண்டும் தெரிவு செய்தனர். இந்திரா தனது முன்னைய தவறுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டார். அவருடைய இரண்டாவது ஆட்சிக்காலம் மிதமான அதிகாரத்துவம் கொண்டதாகவே அமைந்தது. எனினும் இவரது இந்த ஆட்சிக்காலம் சுமுகமானதாக அமையவில்லை.
இக்காலத்தில் இவருக்கு வாரிசாக வரக்கூடியவரென எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி தானே செலுத்திய விமானத்தில் விழுந்து நொறுங்கியதில் காலமானார். சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்துவந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள்.
இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார்.
தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 31, 1984-இல் சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.