சுரண்டலைச் சுட்டிக்காட்டிய 'Grand Old Man of India' தாதாபாய் நெளரோஜி!
மதம், மொழி, இன பேதமற்ற ஒன்றுபட்ட தேசியம், வறுமை அகற்றும் தேசியப் பொருளாதாரம் என்னும் இரு உயர் லட்சியங்களை நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியச் சமூகத்துக்குச் சொன்ன தீர்க்கதரிசி தாதாபாய் நெளரோஜி.
தாதாபாய் நெளரோஜி
வறுமையை ஒழிப்பதே இந்திய தேசியத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். வல்லரசாக அல்ல, வறுமையற்ற தேசமாக இந்தியா உயர வேண்டும் என கனவு கண்டவர் அவர். “இந்தியாவின் முதுபெரும் கிழவர்” என்று போற்றப்பட்ட தாதாபாய் நௌரோஜியின் சிந்தனைகள் இன்றைய இந்தியச் சூழலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கின்றன.
1825 செப்டம்பர் 4ஆம் தேதி பம்பாயில் (தற்போதைய மும்பை) ஒரு பார்ஸிய குடும்பத்தில் நவ்ரோஜி பிறந்தார். அவருக்கு 4 வயதாக இருந்த போது தந்தை பலன்ஜி தோர்டி உயிரிழந்து விட்டாலும், தாதாபாய் நவ்ரோஜிக்கு தரமான கல்வி வழங்கத் தேவையான அனைத்தையும் அவரது தாய் மானெக்பாய் செய்து கொடுத்தார்.
படிப்பு
பம்பாயில் உள்ள எல்ஃபின்ஸ்டோன் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த நவ்ரோஜி, ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்னர் அதே கல்லூரியில் கணிதம், தத்துவப் பாடத்திற்கு பேராசிரியராக நியமிக்கப்பட்டார். கடந்த 1852இல் தனது அரசியல் பயணத்தை துவக்கிய நவ்ரோஜி, ஆங்கிலேயர்களின் ஆட்சி முறையை தீவிரமாக எதிர்த்ததுடன், அதனை கடுமையாக விமர்சித்து அப்போதைய ஆங்கிலேய வைஸ்ராய், கவர்னர்களுக்கு கடிதம் எழுதினார்.
இந்தக் கடிதங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததற்குக் காரணம் இந்திய மக்களின் அறியாமையே என்பதை உணர்ந்த தாதாபாய், மக்களுக்கு கல்வியறிவு வழங்கவும், விடுதலை வேட்கையை எழுப்பவும் கியான் பிரசார்க் மண்டல் என்ற அமைப்பை உருவாக்கினார். கடந்த 1855இல் இங்கிலாந்திற்கு சென்ற தாதாபாய், அங்கு முதல் இந்திய வர்த்தக அமைப்பை 1859இல் துவக்கினார்.
இந்திய சங்கம்
இங்கிலாந்தில் வசித்த காலத்தில் அந்நாட்டு மக்களிடையே இந்தியா, இந்திய மக்களின் துன்பகரமான நிலையை தனது பேச்சுகள், கட்டுரைகள் மூலம் தாதாபாய் விளக்கினார். 1866இல் லண்டனில் கிழக்கு இந்திய சங்கம் தோற்றுவித்தார். அதில் இந்தியாவைச் சேர்ந்த உயர் உத்தியோகஸ்தர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அவர் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இந்தியர்களின் துயரத்தை லண்டனில் வெளிப்படுத்தினார்.
1873இல் பரோடா அரசரின், திவானாகப் பொறுப்பேற்றார். பின்னர் அந்தப் பதவியில் இருந்து விலகி மீண்டும் லண்டன் சென்றார். கல்கத்தாவில், இந்திய தேசிய காங்கிரஸின் முன்னோடியான, இந்திய தேசிய சங்கத்தை, சுரேந்திரநாத் பானர்ஜியுடன் சேர்ந்து உருவாக்கினார். 1886, 1893, 1906 ஆகிய மூன்று ஆண்டுகளில் நடத்தப்பட்ட கூட்டங்களில், இந்திய தேசிய காங்கிரசிற்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சட்டமன்ற உறுப்பினர்
1885இல் இருந்து 1888 வரை மும்பை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். இதன் பின்னர் தாயகம் திரும்பிய தாதாபாய், இந்தியாவின் வள ஆதாரங்களையும், வரிவிதிப்பு, கடன் போன்ற முக்கிய நிதியியல் ஆதாரங்களையும் புள்ளியியல் ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டினார். கடந்த 1870ஆம் ஆண்டில் இந்தியாவில் தனி நபர் வருமானம் ரூ.20 மட்டுமே என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். 1892இல், பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ஃபின்ஸ்புரியில் இருந்து லிபரல் கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆசியர் இவரே.
1895 வரை உறுப்பினராக இருந்தார். அவர் கிறிஸ்தவராக இல்லாததால், பைபிள் மீது சத்தியப் பிரமாணம் செய்யவில்லை. ஜொராஸ்ற்றியன் மதத்தினரின் வேதமான 'அவெஸ்டா' என்ற நூலின் மீது சத்தியப் பிரமாணம் செய்ய அனுமதிக்கப்பட்டார். அவர் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்தியர்களின் துயரத்தை வெளிப்படுத்தினார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், பணியாற்றுவதற்கும் முகம்மது அலி ஜின்னா உதவினார்.
பொருளாதார தேசியம்
முகம்மது அலி ஜின்னா, பின்னர் இந்தியப் பிரிவினைக்குக் காரணமாக இருந்தார். 1907இல் காங்கிரஸ் மிதவாதிகள், அமிதவாதிகள் என்று இரண்டு பிரிவாகப் பிரிந்தபோது, மிதவாதிகள் பக்கம் இருந்தார். அன்னி பெசண்ட் அம்மையாரின், ஹோம் ரூல் இயக்கத்தில் ஆர்வமுடையவராக இருந்தார். இந்தியாவிற்குள் இருவிதமான பொருளாதார அமைப்புகள் இயங்கி வருவதாகக் குறிப்பிட்ட தாதாபாய், ஆங்கிலேயே ஆட்சியாளர்கள், ராணுவத்தினர், முதலாளிகள், வணிகர்கள் ஆகியோர் இந்தியர்களின் மூலதனம், ஊதிய வருமானம், வரி வருவாய், லாபம், வட்டி, ஓய்வூதியத் தொகை ஆகியவற்றை இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்று குவிக்கிறார்கள் என்றும் குற்றம் சாற்றினார்.
அதே தருணத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தின் மற்றொரு பிரிவில் ஏழைகள், விவசாயிகள் என்று சுரண்டப்பட்ட பெரும்பான்மை மக்கள் பெரும் துன்பத்திலும், வறுமையிலும் வாழ்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். தாதாபாய் நவ்ரோஜியின் ‘பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின் வறுமையும்’ (Poverty and Un-British Rule in India) என்ற நூல் ஆங்கிலேயர் அரசின் கொடுங்கோன்மையைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தியது.
சுயராஜ்ய இயக்கத்தின் தொடக்கம்
தாதாபாய் நவ்ரோஜியின் நடவடிக்கைகளால் ஆங்கிலேய அதிகாரிகள் ஆத்திரமடைந்தாலும், சூழ்நிலை கருதி அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். சுயராஜ்ஜியம் என்ற கொள்கையை முதல் முதலில் கையில் எடுத்த பெருமையும் தாதாபாய் நவ்ரோஜியைச் சேரும். பெருந்தலைவராகப் போற்றப்பட்ட மகாத்மா காந்தி உட்பட முன்னணி இந்தியத் தலைவர்கள் பலர் தாதாபாய் நௌரோஜியை தங்களுக்கு வழிகாட்டியாக குறிப்பிட்டுள்ளனர்.
காரணம், தாதாபாய் நௌரோஜியின் பொருளாதாரக் கருத்துகள் இன்றளவும் எண்ணிப் போற்றுகின்ற அளவிற்கு மிகவும் ஆழமான, அறிவு செறிந்த அணுகுமுறைகளைக் கொண்ட கருத்துகளாகும். ஒன்றாக இருந்து சுயாட்சி பெற்று அதனைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே வறுமையிலும், பஞ்சத்திலும் உழன்று கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இந்திய மக்களை காப்பாற்ற முடியும். அப்போதுதான் பண்டைய காலத்தில் இருந்தது போல் உலகின் மிக உயரிய, பண்பட்ட நாடாக இந்தியா உருப்பெறும் என தாதாபாய் நவ்ரோஜி குறிப்பிட்டார்.
மறைவு
காங்கிரஸ் இயக்கம் பெரும் அரசியல் இயக்கமாக வளர்ச்சி அடைந்ததில் இவரது பங்களிப்பு மகத்தானது. தாதாபாய் நௌரோஜி 1917 ஆம் ஆண்டு, ஜுன் 30 தனது 92 ஆவது வயதில் மும்பையில் காலமானார்.
இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மும்பை, கராச்சி(பாகிஸ்தான்), ஃபின்ஸ்புரி(லண்டன்) ஆகிய இடங்களில் முக்கிய சாலைகளுக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. தெற்கு டெல்லியில் உள்ள ஒரு மத்திய அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புப் பகுதிக்கு, நௌரொஜி நகர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
அவர் கண்ட இந்திய தேசம்?
ஆனால், தாதாபாய் நவ்ரோஜி விரும்பிய நிலையில், இந்தியா இன்று உள்ளதா?. ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற இந்தியாவில், சுயராஜ்ஜியம் அமைந்தாலும் நாட்டின் இன்றைய அரசியல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. மாநில அரசுகள் மட்டுமின்றி, சில நேரங்களில் மத்திய அரசும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை நம்பியே சுயராஜ்ஜியம் நடத்துகின்றன. மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் சிறிது சிறிதாக தனியாருக்குத் தாரைவார்க்க மத்திய அரசு திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.