டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் கடைசி 48 வினாடிகள் - திக் திக் சம்பவம்!
டைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடிப்பதற்கு முன்னர் என்ன நடந்திருக்கலாம் என்பதை பற்றி ஸ்பெயின் ஆராய்ச்சியாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல்
வடக்கு அட்லாண்டிக் பெருங் கடலில் மூழ்கிக் கிடக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்க்கச் சென்ற டைட்டன் என்ற நீர்மூழ்கி கப்பல் கடந்த ஜூன் 18 ஆம் தேதி கடலுக்குள் வெடித்துச் சிதறியது.
இது அழுத்தம் காரணமாக வெடித்தது என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அதில் பயணம் செய்த ஐந்து பேரும் பலியாயினர். இந்த கப்பல் வெடிப்பதற்கு முன்னர் என்ன நடந்திருக்கலாம் என்று பலரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த கப்பல் வெடித்து சிதறும்போது என்ன நடந்திருக்கும் என்று ஸ்பெயின் ஆழ்கடல் ஆராய்ச்சியாளரான ஜோஸ் லூயிஸ் மார்ட்டின் என்பவர் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கடைசி வினாடிகள்
அந்த தகவலில் "முதலில் அந்த கப்பலிலிருந்து மின்சாரம் துண்டிக்கப் பட்டிருக்கும். பின்னர் அந்த நீர் மூழ்கிக் கப்பல் வேகம் இழந்திருக்கும், அதன் பின் கடுமையான இருளில் அவர்கள் மூழ்கியிருப்பார்கள்.
அதன் பின் தனது தன்மையைத் தக்க வைக்க முடியாமல் கப்பல் கடல் பரப்பை நோக்கி விழத் தொடங்கியிருக்கும். அதன் பிறகுதான் அந்த கப்பல் வெடித்துச் சிதறியிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கப்பல் வெடிப்பதற்கு 48 முதல் 71 வினாடிகள் இருக்கும்போது தான் தாங்கள் இறக்கப் போகிறோம் என்ற தகவல் அதில் பயணம் செய்த 5 பேருக்கும் தெரிந்திருக்கும் என்ற அதிர்ச்சி தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.