கதற கதற திமுக தொண்டரை கத்தியால் குத்தி படுகொலை செய்த அதிமுக வேட்பாளரின் கணவர் - கூடலூரில் பரபரப்பு
கூடலூர் அருகே திமுக தொண்டரை கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
இதனையடுத்து, நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது- இத்தேர்தலில் திமுக கூட்டணி பெரும்மையான இடங்களை கைப்பற்றி வெற்றி அடைந்துள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா, தேவர்சோலை பேரூராட்சி 10-வது வார்டில் அதிமுக சார்பில் நவுசாத் மனைவி ஷிம்ஜித் போட்டியிட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பாக பெண் வேட்பாளர் எமிபோல் போட்டியிட்டனர்.
இதில், திமுக வேட்பாளர் எமிபோல் வெற்றி அடைந்தார். இதனையடுத்து அப்பகுதி திமுக தொண்டர் சமீர் என்பவர், ஒருவர் தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர் ஹிம்ஜித்தை கேலி செய்ததாக கூறப்படுகிறது.
இதை தனது கணவர் நவுசாத்திடம், அதிமுக வேட்பாளர் ஹிம்ஜித் கூறியிருக்கிறார். இதனால், கோபமடைந்த நவுசாத், சமீருடன் வாக்குவாதம் செய்தார். அப்போது, நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
இவர்கள் இருவரையும் அஸ்கர் என்பவர் தடுக்க வந்தார். அப்போது, அஸ்கரை நவுசாத் கத்தியால் குத்திவிட்டு, சமீரை சராமரியாக கத்தியால் குத்தி கிழித்து விட்டு தப்பியோடிவிட்டார். இந்த சம்பவத்தில் சமீர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சமீரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்தவர்கள் அஸ்கரை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அஸ்கருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்தியால் குத்தி படுகொலை செய்த நவுசாத் தலைமறைவாக உள்ளார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நவுசாத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திமுக தொண்டரை அதிமுக வேட்பாளரின் கணவர் படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.