“திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதை மறைக்கவே சோதனை” - ஈபிஎஸ் காட்டம்
திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதை மறைக்கவே சோதனை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் காலை 6:30 முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனைகளில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
அதிமுகவின் முன்னாள் மின்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. காலை 6:30 முதல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்த ஆலம்பாளையத்தில் உள்ள இவரது வீட்டில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்பு துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு சொந்தமான 69க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், சோதனை நடைபெறும் இடங்களின் எண்ணிக்கை கூடலாம் என கூறப்படுகிறது. அவரது மகன் 2வது குற்றவாளியாகவும், மனைவி 3வது குற்றவாளியாகவும் சேர்ப்பு என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில், “திமுக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதை மறைக்கவே சோதனை” என சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.