வெள்ளை அறிக்கையை வெடிகுண்டு என நினைத்தார்கள்.. ஆனால் புஸ்வானமாகி விட்டது - செல்லூர் ராஜூ கிண்டல்
வெள்ளை அறிக்கையை வெடிகுண்டு என நினைத்து வெளியிட்டார்கள் ஆனால் அது புஸ்வானமாகிவிட்டது என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் அதிமுக போக்குவரத்து தொழிலாளர் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "அதிமுகவில் பதவி, பணம் சம்பாதித்தவர்களே தற்போது திமுகவில் இணைந்து வருகிறார்கள்.
அதிமுக ஆட்சி காலத்தில் திமுகவினர் தங்களுடைய திமுக கரை வேஷ்டியை பெட்டியில் வைத்து பூட்டி விட்டார்கள். அதிமுகவை கருணாநிதியாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை. நிதியமைச்சர் வெள்ளை அறிக்கையை விளம்பரத்துக்காக வெளியிட்டு இருக்கிறார்.
வெள்ளை அறிக்கையை வெடிகுண்டு என நினைத்து வெளியிட்டார்கள்.ஆனால் அது புஸ்வானமாகிவிட்டது. 2026 ஆம் ஆண்டிற்கு முன்னரே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரலாம். அப்போது அதிமுக ஆட்சிக்கு வரும் ”என பேசினார்.