சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறப்பு...!
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதன் மூலம் சட்டப்பேரவையில் 16-வது தலைவராக கருணாநிதியின் படம் இடம்பெறுகிறது.
முதலமைச்சர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கைக்கு நேர் எதிராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு கீழ் “காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது” என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனிடையே இந்த விழாவை அதிமுக புறக்கணித்துள்ள நிலையில், பாஜக சார்பில் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை விழாவில் கலந்து கொண்டார். மேலும் கீ.வீரமணி, வைகோ, திருமாவளவன், கே.எஸ்.அழகிரி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜி.கே.வாசன் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.