பென்னிகுவிக் இல்லத்திற்கு ஆதாரம் உள்ளதா? - ஆவேசமான முதல்வர்
பென்னிகுவிக் இல்லம் இருந்தது என்பதற்கு ஆதாரம் இருந்தால் அரசு அடிபணிய தயார் எனவும் எந்த ஆதாரமும் இல்லாமல் பேசக்கூடாது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, மதுரையில் உள்ள பென்னிக்குவிக்இல்லத்தை மாற்றி கலைஞர் பெயரில் நூலகம் அமைக்க உள்ளதாக தகவல் வருவதாக கூறினார்.
அதற்கு குறுக்கிட்டு பேசிய நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போது எவ்வளவு குறுக்கீடு வந்தது என்பது தெரியும் நேற்று முதல்வர் எதிர் கட்சியினர் பேசும் போது குறுக்கிட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார் .
மேலும் பென்னி குவிக் 1841-1911-ல் வாழ்ந்துள்ளார். ஆனால் அந்த இல்லம் அவரது காலத்திற்கு பின் கட்டப்பட்டுள்ளது. எனவே, இது பென்னிக்குவிக் இல்லமாக இருக்க முடியாது என தெரிவித்தார்.
அதை தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்: பென்னிக்குயிக் இல்லத்தை அப்புறப்படுத்தி கலைஞர் பெயரில் நூலகம் கட்டுவதாக உறுப்பினர் செல்லூர் ராஜூ கூறியது தவறான கருத்து மேலும், அது பென்னிகுயிக் இல்லம் என்பதற்கான போதியஆதாரம் இருந்தால் அரசு அடிபணிய தயாராக இருப்பதாகவும், நிச்சயம் மாற்ற அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆதாரம் இல்லாமல் கருத்தை பதிவு செய்ய வேண்டாம் என்றும் தெரித்தார். இதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, செவி வழியாக வந்த செய்தியை பதிவு செய்தேன் என்றார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் செவி வழி செய்திகளை பேரவையில் பதிவு செய்வது பொருந்தத்தக்கது அல்ல என்று கூறினார்.