ஈரோடு இடைத்தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது
ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
கடும் போட்டி
இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவப்பிரசாத் , தேமுதிக சார்பில் ஆனந்த் , நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக சார்பில் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 8ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும், வேட்பு மனுக்களை திரும்ப பெற பிப்ரவரி 10ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதையடுத்து அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.