ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு யாருக்கு? - முடிவெடுக்க முடியாமல் திணறும் பாஜக
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினர் அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாடுவதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என தெரியாமல் பாஜக திணறி வருவதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைந்த நிலையில் அந்த தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து திமுக கூட்டணி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டு திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அதிமுகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியினர் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டாலும் சுயேச்சை சின்னத்தில் வேட்பாளரை களம் இறக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
அதே போன்று ஓ.பன்னீர்செல்வமும் தனது அணியினர் சார்பில் வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளார். இதனிடையே தேமுதிக, அமமுக, ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சி தனது வேட்பாளரை இன்று அறிவிக்க உள்ளது.
முடிவெடுக்க முடியாமல் திணறும் பாஜக
வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக இருவர் அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாடுவதால் யாருக்கு ஆதரவு அளிப்பது என தெரியாமல் திணறி வருகிறது.
இதையடுத்து நாளை மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்க தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.
நாளை திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில், மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட தலைவர்கள் கூட்டம் கூட்டப்படுகிறது.