திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளது - ஈபிஎஸ் கடும் விமர்சனம்!
திமுக ஆட்சியில் தமிழ்நாடு கொலைக்களமாக மாறியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு கொலைக்களம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையை சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன்(18). இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தார். இவர் தனது உறவினர் மகன் சந்தோஷ்(20) என்பவருடன் சேர்ந்து காவிரி ஆற்றில் அதிக நீர் வருவதால் அதை பார்க்க சென்றுள்ளனர்.
அப்போது அதே பகுதியில் மது அறிந்து கொண்டிருந்த ஐந்து பேர் ரஞ்சித் மற்றும் சந்தோஷ் இருவரையும் நீங்கள் யார் ? எதற்காக இங்கு வந்துள்ளீர்கள்? என கேட்டுள்ளனர். இந்த பகுதிக்கு வரக்கூடாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
வாக்குவாதம் முற்றியதில் அவர்கள் அனைவரும் சேர்ந்து ரஞ்சித், கண்ணனை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ரஞ்சித்துக்கு மயக்கம் வந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஸ்ரீரங்கம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஈபிஎஸ் விமர்சனம்
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைத்தளத்தில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்ற மாணவர் போதைக் கும்பலால் கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
ஆடிப்பெருக்கன்று, காவிரி ஆற்றங்கரையில் கொலை நடந்திருப்பது, சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு சான்று என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர், கோவை, சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் கொலை நடந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாள்தோறும் கொலை சம்பவங்கள் நிகழ்ந்தால், தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் எப்படி வரும்? சட்டம் ஒழுங்கை காப்பதற்கான நடவடிக்கைகளில் இனியாவது திமுக அரசு ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.