சனாதன சர்ச்சை...ஆழமாக போக விரும்பவில்லை....இபிஎஸ் கருத்து
உதயநிதியின் சனாதன கருத்து பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அந்த விவகாரத்தில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சனாதன சர்ச்சை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சில தினங்கள் முன்பு தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசும் போதும், டெங்கு, மலேரியா போல இந்த சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும் என அதிரடியாக கருத்து தெரிவித்திருந்தார்.
தமிழக அரசியலை கடந்து இந்த விவகாரம் தேசிய அரசியல் வரை கடுமையாக எதிரொலித்துள்ளது. இந்நிலையில், இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஆழமாக போகவிரும்பவில்லை
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது என குற்றம்சாட்டிய அவர், போதை பொருள் விற்பனை, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் மக்களை திசைத்திருப்ப சனாதன தர்மம் ஒழிப்பு என்ற கருத்தை உதயநிதி தெரிவித்துள்ளார் என சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைத்த திமுக சனாதன ஒழிப்பை பற்றி பேசுகிறது. அதிமுகவை பொறுத்தவரை எம்ஜிஆர் காலம் வரை தற்போது வரை மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற்படுத்தப்பட்ட கட்சியாக உள்ளது என்றும் மேலும் தாங்கள் ஆழமாக போகவிரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.