ஜெய்பீம் படம் பார்த்து சினிமா ரிவ்யூ எழுதிய முதல்வர் எங்கே? எடப்பாடி பழனிசாமி கேள்வி
காவல்துறை விசாரணையில் இளைஞர் மரணமடைந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவல்துறை விசாரணையில் இளைஞர் மரணம்
மதுரையை சேர்ந்த சிவகாமி என்பவர், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.
சிவகாமி வயதானவர் என்பதால் கோவில் தற்காலிக ஊழியர் அஜித், வீல் சேர் கொண்டு வந்து கொடுத்துள்ளார். மேலும், அவர்கள் கூறியபடி, காரை பார்க் செய்து, காரின் சாவியை அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
கோவிலில் தரிசனத்தை முடித்து விட்டு, காருக்கு திரும்பிய போது, காரில் இருந்து 10 பவுன் நகையை காணவில்லை என திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில், இளைஞர் அஜித்தை அழைத்துச் சென்று, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது தனிப்படை காவலர்கள் தாக்கியதில், அஜித் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனிப்படை காவலர்கள் 6 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ள மாவட்ட எஸ்பி ஆசித் ராவத், இந்த சம்பவத்தில் வெளிப்படையான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், காவல்துறை விசாரணையின் போது இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது" என சினிமா Review எழுதிய விடியா அரசின் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்?
விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?
தவறு செய்ததாக காவல்துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக காவல்துறை எடுத்துக்கொள்ள கூடாது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்ததாகவும், அச்சமயத்தில் காவலரின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்து…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) June 29, 2025
தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத பொம்மை முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
திருபுவனம் காவல் நிலையத்தில் திருக்கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்த நிகழ்வு குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்தி, இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.