ஓபிஎஸ் தொடர்ந்து மேல்முறையீடு வழக்கு...கேவியட் மனு தாக்கல் செய்த இபிஎஸ்
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் இபிஎஸ் தரப்பு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.
அதிமுக பொதுக்குழு
கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கிய அதிமுக பொதுக்குழு பிரச்சனை தற்போது வரை நீடித்து வருகின்றது. ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டும், எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் அண்மையில், அதிமுகவின் பொதுக்குழு மகிரும் அதன் தீர்மானங்கள் செல்லும் என கூறி ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
கேவியட் மனு தாக்கல்
இந்த தீர்ப்பின் மூலம் கட்சியின் முழு அதிகாரமும் பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுள்ளது. இந்த தீர்ப்பு வெளியானது முதல் ஓபிஎஸ் தனி கட்சி துவங்குவாரா? அல்லது மீண்டும் வழக்கு தொடுப்பாரா? போன்ற பல கேள்விகள் அடுக்கடுக்காக எழுந்தன.
இந்நிலையில் தான் ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் விசாரணை நடத்தப்படும் போது தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்கவேண்டும் என இபிஎஸ் தரப்பு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.