தித்திக்கும் தீபாவளி பண்டிகை: எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை மக்களுக்கு வாழ்த்து!
எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை தமிழக மக்களுக்கு தீபவாளி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் "மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை இறைவன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.
தித்திக்கும் இந்த தீபாவளித் திருநாளில், துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலர,மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட,மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திடவேண்டும் என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.,புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை வாழ்த்து
இதேபோல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் "தமிழக மக்கள் அனைவர் வாழ்விலும், தீமைகள் நீங்கி நல் ஒளி பிறக்கவும், இன்பமும், மகிழ்ச்சியும் பெருகிடவும், அன்பும் சகோதரத்துவமும் நிலைத்திடவும், தமிழக பாஜக சார்பாக, இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.